×

கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்திய நபர் தப்பி ஓட்டம்-350 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் இருந்து குறைந்த விலை மதுபானங்களை வாங்கி தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து மலை கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. நேற்று தாளவாடி போலீசார் தாளவாடி-தலமலை சாலையில் உள்ள மகா ராஜன்புரம் வன சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றபோது பைக்கில் சாக்கு மூட்டையுடன் அவ்வழியே வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடி மறைந்தார்.

இதையடுத்து போலீசார் பைக்கில் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனையிட்டபோது அதில் 180 மில்லி அளவுள்ள 350 மதுபான பாக்கெட்டுகள் இருந்ததும், இந்த மதுபான பாக்கெட்டுகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மதுபான கடையில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தாளவாடி மலைப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது. பைக்கில் மதுபானங்களை கடத்தி வந்த நபர் தாளவாடி அருகே உள்ள முதியனூர் அம்பேத்கர் வீதியை சேர்ந்த ரங்காராம் (38) ஆவார். மதுபான பாக்கெட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடி தலைமறைவான ரங்காராமை தேடி வருகின்றனர்.

The post கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்திய நபர் தப்பி ஓட்டம்-350 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Sathyamangalam ,Thalawadi ,Tamil Nadu-Karnataka ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை